Director Ameer: ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 11) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
அதில், இயக்குநர் அமீரும் கலந்துகொண்டு தொழுகை செய்தார். தனது தொழுகையை முடித்த பின்னர் அங்கிருந்த இஸ்லாமியர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். தொடர்ந்து, NCB விசாரணை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “NCB விசாரணை நடைபெற்றது உண்மைதான்.
சுமார் 11 மணி நேரம் நடைபெற்றது, ED சோதனையும் நடைபெற்றது, இதில் பல ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், என்ன ஆவணங்கள் என்பதை நான் கூற முடியாது அதிகாரிகளே கூறுவார்கள். நான் அனைத்து விசாரணைக்கும் தயாராக தான் இருக்கிறேன்.
சமூக வலைத்தளங்களில் என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுப்பேன். மேலும், இது குறித்து என்னால் பேச முடியாது” என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.